சரசத்தாலும் சாகசத்தாலும் எப்படியோ அரசியின்மீது அரசனுக்கு இருந்த அன்பை அழித்துவிட்டேன். அரசனது இருதயத்திலே அழியாத சித்திரமாக அமர்ந்திருந்தாள் அந்தக் கோப்பெருந்தேவி. அந்தக் கலையாத ஓவியத்தைக் கரிகொண்டு மெழுகிவிட்டேன்.
"மன்னனின் மன மாளிகையில் ஜோதி விளக்கு அவள். ஒரு காலத்தில்! அந்த ஜோதி விளக்கு இன்று வீதியிலே வீசப்பட்டுவிட்டது. தோழிகள் புடை சூழ- தோகை மயில்கள் ஆடும் நந்தவனத்தில் மலரால். நடை பாதை அமைத்து, அவளும் அரசரும் ஆனந்த பவனிகள் நடத்தினரே-அது அந்தக் காலம்.
"இப்போது வேந்தரின் இருதயத்தில் இந்த சுழற் கண்ணியின் சுந்தர ரூபம் பூஜை அறைப் படம்போல ஜோடித்து வைக்கப்பட்டிருக்கிறது. வேந்தரின் "மடியும், மலைத் தோளும் அவளுக்குச் சொந்தம் ஒரு காலத்தில்! இன்றோ என் சொல்லுக்குச் சுழலும் "மாயப் பதுமை'' யாகி விட்டார். மணிமுடி வீரர் ! இது எனக்கு வெற்றி தான்--ஆனாலும் என் மனம் அமைதியடையவில்லை. அரசரின் பாசத்தையும் நேசத்தையும் இழந்தாள் எனினும் பட்டத்து ராணி என்ற மதிப்பை இழந்தாள் இல்லை. அவளது மகன்தான் கிரீடத்துக்குச் சொந்தக்காரன் என்ற பாத்யதையைப் பறிகொடுத்தாள் இல்லை.
"இந்த நிலையில் எனக்கு நிம்மதி ஏது மைத்துனரே! ஊரெல்லாம் அவள் பக்கம் அனுதாபம் காட்டுகிறது. அரசரும் அவளும் பிரிந்திருப்பது நாட்டுக்கு ஏற்பட்ட எதிர்பாராத கேடு என்று புலம்புகிறது மக்கள் மன்றம்.
என்னுடைய குணாதிசியங்களைக் கொற்றவன் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை; அதனால் என் வலையில் வீழ்ந்து விட்டார் - என்று மந்திரிகளின் குழு மாரடித்து அழுது கொண்டிருக்கிறது. இளையராணி நான்-என்கிற மதிப்பைக்கூடத் தர மறுக்கிறது அரண்மனை வட்டாரம்.